Powered By Blogger

Friday 29 July 2011

நிமிடங்களின் இணைப்பில்!!






பிறப்பின் நாழிகைக்கும்
இறப்பின் மணித்துளிக்கும்
இடைவெளி சிறிதே
மரணத் தருவாயில்
மனம் மல்காது
முந்தைய பொழுதுகளை
உந்து கோலாக்கி
உய்வின் வழிதேடு!!

கையிலே கிடைத்துவிட்டால்
சதிராட்டம் போடாது
வறுமை உனைத்தொடுமுன்
செல்வோம் எனும் செல்வத்தை
சேமிக்கப் பழகிகொள்
இன்றோடு தொலையாதே
நாளை என்றொரு நாளிருக்கு!!







தன்னை அறிந்துகொள்
தன்னிலை அறிந்துகொள்
உன்னைவிட சிறந்தோர்
பலருண்டு புரிந்துகொள்
உன்னை உணர்த்தி
தனித்தன்மை காட்டிவிட
தற்பெருமை அழித்துவிடு!!

உயிரின் செல்களில்
வேதியியல் கூறுகளாய்
ஒழுக்கத்தை விதைத்துவிடு!
வைரத்தின் மாற்றுருவாம்
வைராக்கியம் வளர்த்துவிடு! - உன்
தகுதியை தகர்த்தெறியும்
தாழ்வெண்ணம் தவிர்த்துவிடு!!




முன்னிலை உள்ளவரின்
பின்புலம் அறிந்துகொள்
தானென்று எண்ணாதே
தன்னடக்க நிழல் நாடு!
துடுக்கை அழித்து
வாழ்க்கைப் படகின்
துடுப்பைத் தேடு!!

அன்பின் வலிமையுடன்
பண்பின் துணைகொள்!
ஏற்றமது ஏறுகையில்
குற்றம் புரியாது
பணிவைப் பற்றிக்கொள்!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதுரியம் கற்றுக்கொள்!!







நிறம்மாறி உருமாறி
தன்னிலை தடம்மாறி
கூதிர்காலம் முன்னே
நிலத்தை முத்தமிடும்
இலைகளின் பருவத்தில்!
இலையுதிர் காலமென்றும்
நிலைக்கும் நிரந்தரமல்ல!!

மொட்டவிழ்ந்து விரிந்து
மகரந்த மகசூலை
மடைமீறும் நதியாய்
வனமெங்கும் தூவச்செய்து
கனி குவியச் செய்யும்
வசந்த காலமிங்கே -இதோ
நிமிடங்களின் இணைப்பில்!!


அன்பன்
மகேந்திரன்

Monday 25 July 2011

களையெடுக்கப் போகையிலே!!






வைகறை கவிழ்ந்திருச்சு
கீழ்வானம் செவந்திருச்சு
களத்துமேட்டில் நின்று
கருத்தசேவல்  கூவிருச்சு!!

ஆளுக்கொரு ஆலங்குச்சி
விரலிடுக்கில் வைச்சிகிட்டு
ஆலங்குச்சி கிடைக்கலேன்னா
வேலங்குச்சி எடுத்துக்கிட்டு
கம்மாக்கரை ஒதுங்கிடுவோம்
சும்மா கதை பேசிகிட்டு!!




செப்புப்பானை தவளைப்பானை
செருக்கிடுப்பில் தூக்கிகிட்டு
கெண்டைக்காலு கொலுசுசத்தம்
தெம்மாங்கு பாட்டுப்பாட
ஊரோர நீராவிக்கு
ஊர்வலமா போனோமய்யா!!

ஒருசோத்து பெண்கள்கூடி
ஓராயிரம் கதைபேசி
வெண்கலத் தூக்குலதான்
கேப்பக்கஞ்சி எடுத்துகிட்டு
ஊர்முழுசும் நிறைஞ்சிருக்கும்
நெல்விளையும் நிலமெங்கும்
களையெடுக்கப் போகையிலே!!




உரம்போல உடம்பிருக்க
உலக்கைப்போல கையிருக்க
களத்துமேட்டு காவல்விட்டு
கமலையேற்றம் ஏறும்போது
கடைக்கண்ணு பார்வையாலே
சுண்டிபோட்டு இழுத்தாரே
சண்டிமாடு அடக்கிவைக்கும் 
செவளைக்காளை பொன்னுமச்சான்!!

ஊரோரம் தோப்பிருக்கும்
தோப்பெல்லாம் மரமிருக்கும்!
வானந்தொட வளர்ந்திருக்கும்
வேப்பமரக் கிளையிலதான்
கயத்தாலே ஊஞ்சல்கட்டி
வக்கனையா ஆடயில!
வேகாத வெயிலில
வேர்வைசிந்த உழைச்சிவந்த
களைப்பெல்லாம் போயிருச்சு!!




சொந்த நிலமில்லை
சொகுசான வாழ்க்கையில்லை
ஒண்டு குடிசையில
உறவுகள் அத்தனையும்
சேர்ந்து உறவாடி
நிம்மதியா வாழ்ந்திருந்தோம்!!

கால்வயித்து கஞ்சிகூட
சிரமப்பட்டு குடிச்சாலும்
சுத்தமான காத்துவந்து
எம்மனச தாலாட்டும்
பசபசக்கும் பூமியில
பவுசுக்கதை பேசிகிட்டு
ஒத்துமையா வாழ்ந்திருந்தோம்!!




நாங்க சிரமப்பட்டாலும்
புள்ளைகள படிக்கவைச்சோம்
புத்திசாலிப் பிள்ளைகளும்
பக்குவமா படிச்சுதைய்யா!
வேலைகளின் சோழிக்காக
பட்டணத்தின் புழுதிக்காட்டில்
பிரவேசம் ஆனதைய்யா!!

பளபளன்னு இருக்குதையா
பளிங்கு போல இங்கு எல்லாம்!!
எங்கூரு பனைமரம்போல்
வீடு எல்லாம் பெருசைய்யா!!
காசுபணம் விட்டெறிஞ்சா
கேட்டதெல்லாம் கிடைக்குதைய்யா
எங்கூரு வேப்பங்காட்டு - நல்ல
காத்து மட்டும் கிடைக்கலைய்யா!!







நான் பெத்த செல்லமக்கா
வேணாமடி எனக்கிந்த பட்டணம்!
மூச்சுகாத்த காசுகொடுத்து வாங்க
நான் பண்ணையாரு இல்லையப்பா!
ஊசிமுனை அளவுகூட
பச்சைநிலம் பார்க்கவில்ல
வாசதெளிச்சு கோலம்போட
ஒருசதுர நிலம்கூட தெரியவில்ல!
நான்போறேன் என் ஊரு
விளஞ்சிவந்த வயக்காட்டில்
நாலு களை பிடுங்கினாத்தான்
இந்த சென்மம் செஞ்ச பாவமெல்லாம்
புண்ணியமா போகுமய்யா!!



அன்பன்
மகேந்திரன்

Saturday 23 July 2011

தொடுவானம் தொட்டுவிடு!!






கருவறையில் கருங்குஞ்சாய்
அடைபட்டுக் கிடந்தாலும்
குறைவேதும் இல்லாமல்
நெறிமுறைகள் கற்றுவிடு!!
நெறிமுறையின் வழியதிலே
வளமாக வாழ்ந்துவிடு!!

வந்ததுயர் ஏதெனினும்
துவண்டு மட்டும் வீழாதே
துள்ளி எழுந்துவிடு!
துணிவுடன் நடைபயில்
நடைபாதை இலக்காய்
வெற்றியினை வைத்துவிடு!!




பொங்கிவரும் உன்னுணர்வை
மதகிட்டு அடக்காதே!
மடைதிறக்கும் வெள்ளமென
பலதிசைக்கும் திறந்துவிடு! 
கட்டற்ற காட்டாறு போலன்றி
கரையடங்கும் நல்நதியாய்
நற்குணங்கள் சமைத்துவிடு!!

வெற்றுக்காகிதமாம் உன்வாழ்வில்  
இகழ்ச்சிகளை உதறிவிட்டு
எண்ணங்கள் எனும் வண்ணத்தில்
நம்பிக்கை எழுதுகோலில்
முயற்சியெனும்  மைகொண்டு
வெற்றியை உருவேற்றும் 
தகுதியை வளர்த்துவிடு!!




போகின்ற நெடும்பயணத்தில்
ஆயிரம் தடைகள் தான்!
முடையிடும் முட்டுக்கட்டைகளை
பட்டுச்சட்டையாய் ஆக்கிவிடு!!
தளர்ந்துவிடா முயற்சியுடன்
தடைகள் தாண்டி முன்னேறி
வாகைக்கொடி ஏற்றிவிடு!!

சிரமத்தை ஏற்றுவிக்கும்
சிக்கல்கள் சிலகோடி!
சிக்கலைப் பிரித்தெடுக்க
சிரத்தையுடன் போராடு!
தூரமெல்லாம் அதிகமில்லை
தொடுவானம் தொட்டுவிடு!!





நெடுந்தூரக் களப்பயணம்
மூச்சு வாங்க வைத்துவிடும்!
இலட்சியத்தை நெஞ்சிலிருத்து!
நேற்றைய இருள்விலக்க
நாளைய வழிதெரிய
இன்றைய முயற்சியெனும்
அகல்விளக்கு ஏற்றிவிடு!!

தொடர்ந்துவரும் கணைகளாய்
பிரச்சனைகள் ஏராளம்!
மனமொடிந்து போகாமல்
அறிவெனும் கேடயத்தால்
அறப்போர் நடத்தியிங்கே!
நெறிபிறழா வாழ்வதனை
நேர்மைபட வாழ்ந்துவிடு!!


அன்பன்
மகேந்திரன்

Thursday 21 July 2011

பனங்காட்டு சடுகுடு!!






சடுகுடுகுடு குடுகுடு
சாத்தானுக்கு அடிகுடு
சடுகுடுகுடு குடுகுடு
சன்மானத்த எடுத்திடு!!

மரம் மரமாம் பனைமரம்
மந்தியில்லா பனைமரம்
பதநீர குடிச்சிபுட்டு
பாஞ்சி பாஞ்சி அடிச்சிடு
சடுகுடுகுடு குடுகுடு!
பனங்காட்டு சடுகுடு!!

இலையிலையாம் வேப்பிலை
கசப்பான வேப்பிலை
வேப்பிலையை கையிலேந்தி
வேதாளத்த ஒட்டிடு!
சடுகுடுகுடு குடுகுடு
வேட்டைக்காரன் சடுகுடு!!




பூ பூவா பூத்திருக்கு
பூவரச மரத்தில
புள்ளையார கும்பிட்டுட்டு
புரட்டி புரட்டி எடுத்திடு
சடுகுடுகுடு குடுகுடு!
பூந்தோட்ட சடுகுடு!!

போவோமா சந்தைக்கு
சமுதாய சந்தைக்கு!
சகலரைப் போல் இல்லாத
போக்கத்த பயலுகள
புரட்டி புரட்டி எடுத்திட!!
போவோமா சந்தைக்கு
சடுகுடுகுடு குடுகுடு!
தண்டாசுரன் சடுகுடு!!




கூழைக்கும்பிடு போட்டுபோட்டு
அதிகாரத்த பிடிச்சபின்னே
ஊர்ப்பணத்த ஏப்பமிட்டு
உயிர்வளர்க்கும் சாத்தான
பிடிச்சி இங்கே போட்டிடு
கும்மாங்குத்து குத்திடு
சடுகுடுகுடு குடுகுடு
சாட்டையெடுத்து  அடிகுடு!!

பெண்களெல்லாம் இளப்பமின்னு
மனுசரா பார்க்காம
காமப்பசிக்கு தீனியாக்கும்
கயவாளிப் பயலுகள
தூக்கியிங்கே வந்திடு
துண்டுதுண்டா நறுக்கிடு
சடுகுடுகுடு குடுகுடு
தூக்கிலவனைப் போட்டிடு!!

செய்யும் வேலை தெய்வமின்னு
மனசால நினைக்காம
செய்யுகிற வேலைக்கெல்லாம்
மனசாட்சி இல்லாம
கையூட்டு கேட்பவன
இழுத்து இங்கே வந்திடு
கைகால ஒடிச்சிடு!
சடுகுடுகுடு குடுகுடு
முடமாக்கிப் போட்டிடு!!




திடமான உடம்பிருக்க
உழைச்சி இங்கே திங்காம!
அடுத்த மனுஷன் வீட்டுல
பாடுபட்டு சேர்த்த பணத்த
திருடிக்கிட்டு போறவன!
பிடிச்சி இங்கே வந்திடு
குரல்வளையை பிடுங்கிடு!
சடுகுடுகுடு குடுகுடு
சாணம்வர உதைத்திடு!!

ஊரெல்லாம் போவோமய்யா
உளவு அங்கே பார்ப்போமய்யா!
சின்னதப்பு நடந்தாலும்
சித்ரவதை செய்வோமய்யா!!
தப்ப எல்லாம் திருத்திக்கோ
தண்டனையில் விலகிக்கோ!!
நல்லவனா வாழ்வதென்ன
இவ்வுலகில் சிரமமாய்யா??!!
சடுகுடுகுடு குடுகுடு
நல்லவனா வாழ்ந்திடு!!

 
அன்பன்
மகேந்திரன்

Monday 18 July 2011

என் மூச்சின் மூன்று சுவாசங்கள்!! (தொடர் பதிவு )





பதிவுலகின் சிறுகுழந்தையாம் எனை சக பதிவாளராய் அங்கீகாரம் கொடுத்து  தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். எனக்குத் தெரிந்த நடையில் இங்கே என் வாழ்வின் மூன்று உச்சங்களை இங்கு பதிவிடுகிறேன்.

1) இந்த விதையை விளைவித்த மூன்று உயிர்கள்:


  • என் கண்ணின் மணியில் குடியிருக்கும் என் தந்தை.
  • எனை இங்கு சான்றோர் சபையில் அமரச் செய்த என் தாய்.
  • என் மூளையின் பிம்பமாய் என்னுள் இருக்கும் என் மனைவி.

2) நன்றி சொல்ல விரும்பும் மூவர்:
  • வலைப்பதிவுகளில் எனை அறிமுகம் செய்த தோழி அனு
  • பதிவிட்டதும் ஓடோடி வந்து கருத்துரைக்கும் தோழர் சிவ.சி.மா.ஜானகிராமன்
  • வலைச்சரத்தில் எனை முதலில் அறிமுகம் செய்த தோழர் கவிதைவீதி சௌந்தர்.

3) விரும்பும் மூன்று:
  • என்னுயிரில் கலந்திருக்கும் எம்மொழியாம் தமிழ்
  • எனை வாழவைக்கும் செய்யும் தொழில்
  • மழலை மனம் மாறா என் குழந்தைகள்.

4) விரும்பாத மூன்று:
  • புறம்பேசுபவர்கள்
  • நம்பிக்கைத் துரோகம்
  • முகத்திற்கு முன் நல்லவராய் நடித்தல்.

5) கோபப்படும் மூன்று:
  • உறவுகளின் உன்னதத்தை உதறுபவர்கள் மீது
  • கருக்கலைப்பு செய்பவர்களை காணும் போது
  • கையூட்டு வாங்குபவர்களை காணும் போது









6) பிடித்த மூன்று:

  • நாட்டுப்புறக்கலைகள்
  • சடுகுடு ஆட்டம்
  • மனைவியின் சமையல்

7) தெரிந்துகொள்ள விரும்பும் மூன்று:
  • நாடகம் இயற்ற
  • தோட்டக்கலை
  • நீச்சல் பழக (தண்ணீரைப் பார்த்தால் பயம்)

8) வியந்த திரைப்படங்கள் மூன்று:
  • சித்தி (பழையது)
  • அறிவாளி (பழையது)
  • பிதாமகன்

9) பிடித்த பின்னணிப் பாடகர்கள் மூவர்:
  • ஸ்வர்ணலதா
  • எஸ்.ஜானகி
  • எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

10) பிடித்த நாட்டுப்புறப்பாடகர்கள் மூவர்:
  • தேக்கம்பட்டி சுந்தரராஜன்
  • பரவை முனியம்மா
  • புஷ்பவனம் குப்புசாமி

11) சகிக்க முடியாத மூன்று:
  • குழந்தைகளின் அழுகை
  • விபத்து
  • கொடூர நோய்

12) புரிந்துகொள்ள முயற்சிக்கும் மூன்று:
  • ஆன்மிகம்
  • இயந்திரவியல்
  • விஞ்ஞானம்

13) செய்ய நினைக்கும் மூன்று:
  • கவிதைகளின் மூலம் நல்லவைகளை எடுத்துரைக்க
  • வாழ்வியல் தத்துவங்களை தவறும் ஒருவரையேனும் நல்வழிப்படுத்த
  • நாட்டுப்புறக்கலைகளை முடிந்தவரை உலகமெங்கும் எடுத்துச் செல்ல

14) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..? (மனப்பூர்வமாக)

  • http://sivaayasivaa.blogspot.com/ (சிவ.சி.மா.ஜானகிராமன்)
  • http://rupika-rupika.blogspot.com/(
  • http://thulithuliyaai.blogspot.com/(M.R)

வாருங்கள் தொடருங்கள் நண்பர்களே.




அன்பன்
மகேந்திரன்

Saturday 16 July 2011

உறுதியாக உனக்குத்தான்!!






கனவிலே மிதந்திருந்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
கையிலுள்ள காசைவைத்து
கடல் வாங்க ஆசைப்பட்டேன்!!

சிலகாச கையில் வைச்சி
சிரமமேதும் இல்லாம
சீக்கிரமா மேலவர
சின்னபுத்தி போயிடுச்சி!!




செய்த தொழில் அத்தனையும்
சேதாரம் ஆகிபோச்சு
சேர்த்துவைச்ச பணமெல்லாம்
சேத்துக்குள்ள முங்கிப்போச்சு!!

தேனென்று நினைச்சிருந்தேன்
தேடிவந்த வாய்ப்பெல்லாம்
தீண்டி அதை பார்த்ததுமே
தேளாக கொட்டிடுச்சு!!




எண்ணம்போல வாழ்வென்று
ஏமார்ந்து இருந்துவிட்டேன்
எடுத்துச் சொல்ல யாருமில்ல
ஏற்றம் வந்து சேரவில்லை!!

நொந்துபோன நெஞ்சோடு
நெடுந்தூரம் நடக்கையில
கெண்டகாலு சோர்ந்துபோயி
கொஞ்சநேரம் ஓய்வெடுத்தேன்!




கருவேல மரத்தடியில்
காலைநீட்டி படுத்தபோது
காலம்சொல்லும் நீதியதை
கண்ணாரக் கண்டேன் அங்கே!!

சின்னஞ்சிறு குருவியொன்று
சின்னச்சின்ன குச்சிசேர்த்து
சின்னஞ்சிறு கூடுவொன்றை
சிறப்பாகக் கட்டக்கண்டேன்!!

ஒருகுச்சி எடுத்துவர
ஒருநூறு மைல் கடந்து
கூட்டில் அதை போட்டுவிட்டு
மூச்சிரைக்க நிற்கக்கண்டேன்!!

கபாலத்தின் களமதிலே
செஞ்சூடு போட்டதுபோல்
சுருக்கென்று ஓருணர்வு!
சீக்கிரமா பணம்சேர்க்க
சீர்கெட்டு போனபோது
சின்னஞ்சிறு குருவிக்குள்ள
புத்திகூட எனக்கு இல்ல!!




சிறுவிதை போட்டு மரமாகி
மரம் பூத்து காய்போட்டு
காய்கனிந்து பழமாக
காலமது உள்ளதென்று
இப்போது புரிந்துகொண்டேன்!!

நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த
நேர்மையெனும் பாதையில
நெறிதவறா உழைப்பிருந்தா
வெற்றிவந்து நமைச்சேரும்!!

கடல்நிறைய நீரிருந்தும்
குடிப்பதற்கு ஆவதில்லை!
தவறான வழிவந்த பணமெதுவும்
உன்னிலையை ஏற்றாது!!

போட்டியுள்ள உலகமிதில்
பொறுமையுடன் போர்புரிந்தால்
வெற்றியெனும் புதையலிங்கே
உறுதியாக உனக்குத்தான்!!

அன்பன்
மகேந்திரன்

Friday 15 July 2011

விடை என்ன சொல்லிடடி??!!






ஒத்தையடி பாதையில
ஒத்தையாக போறவளே
மச்சான் நானும் கூட வாரேன்
சேர்ந்து பேசி போவோம் பெண்ணே!!

முறுக்குமீசை வைச்சவரே
இடும்பு எண்ணம் கொண்டவரே
சேர்ந்துபோக காத்திருக்கேன்
பக்கம் வந்து பேசு மச்சான்!!




ஒயிலான மயில் போல
ஒய்யார நடைபோட்டு
ஓவியமா போறவளே
விடுகதை நான் போடட்டுமா!!

தேக்குமரம் தோத்துபோகும்
தேகபலம் கொண்ட மச்சான்
விடுகதை போட்டிடுங்க
பதில  நானும் சொல்லிடுறேன்!!




ஆனை ஏறாத மலையில
ஆடு ஏறாத மலையில
ஆயிரம் பூ பூத்திருக்கு
பூவெல்லாம் கொட்டிருக்கு!!
அது என்ன சொல்லிடடி??!!

வக்கனையா வந்து இங்கே
விடுகதைய சொன்ன மச்சான்!
நீ சொன்ன மலையிங்க
வானமுன்னு சொல்லிடுவேன்
ஆயிரம் பூ என்பதெல்லாம்
நட்சத்திரப் பூதானே!!




இசபாடும் பூங்குயிலே
அழகான தாமரையே!
சரியாகச் சொல்லிபுட்டே!
ஓடோடும் சங்கிலி
உருண்டோடும் சங்கிலி
பள்ளத்தை கண்டா அங்கே
பாய்ந்தோடும் சங்கிலி!
அது என்ன சொல்லிடடி??!!

சிலிர்த்து நிற்கும் சிங்கம் போல
வீரநடை போடும் மச்சான்!
ஓடோடும் சங்கிலி
உருண்டோடும் சங்கிலி
தாகத்த தீர்த்து வைக்கும்
தண்ணீர்தானே இங்க
நீ சொன்ன சங்கிலி!!




குவளை மலர்க் கண்ணழகி
கொஞ்சி கொஞ்சி பேசும் கிளி!
அறிவாக சொல்லிபுட்ட
அடுத்ததையும் சொல்லிவிடு!
வலிமையான தேகமுண்டு
மேனியெல்லாம் சடையுமுண்டு
ஓங்கியடிச்சா அழுதிடுவான்
பிளந்தாலோ சிரித்திடுவான்!!
யாருன்னு சொல்லிடடி??!!

பொதிகை மலை பாறைபோல
தோளிரண்டும் கொண்ட மச்சான்!
இயல்பான விடுகதைக்கு
என் பதிலா கேளு மச்சான்!
வெளியில் பார்க்க வலிமையா
திறந்து பார்த்தா வெண்மையா
தினமும் நாம பயன்படுத்தும்
தென்னையோட பிள்ளையாம்
தேங்காயின்னு சொல்லிடுவேன்!!




எனக்குன்னு பொறந்தவளே
ஏகமாக வளர்ந்தவளே!
மல்லிப்பூ சூடிக்கொண்டு
மனச மயக்கி போறவளே!
நாங்கேட்ட கேள்விக்கெல்லாம்
பதிலைத்தான் சொல்லிபுட்ட
நீ இப்போ கேட்டுவிடு
பதில நானும் சொல்லிடுறேன்!!!

எனையாள வந்தவரே
என்னாசை கருத்த மச்சான்!
நான் சொல்லும் விடுகதைக்கு
விடையை நீங்க சொல்லிடுங்க!
அடைஞ்சதும் குறைஞ்சதிங்கே
விடிஞ்சதுமே ஏறிப்போச்சு
கட்டுப்படுத்த யாருமில்ல
காலனிங்கு இதுக்கு இல்ல!
அது என்ன சொல்லு மச்சான்??!!




ஆடுபுலி ஆடுறியே
அசைந்தாடும் அன்னக்கிளி
ஆழத் தேடிப்பார்த்தேன்
அகப்பட வில்லையடி !
பதிலெனக்கு பிடிபடல
பாங்காக சொல்லிடடி!!

கண்போல எனைகாக்கும்
கருத்தான சின்னமச்சான்!
அடைஞ்சதும் குறைஞ்சதிங்கே
விடிஞ்சதுமே ஏறிப்போச்சு
கட்டுப்படுத்த யாருமில்ல
காலனிங்கு இதுக்கு இல்ல!
என்று நான் சொன்னதெல்லாம்
விலைவாசி ஏற்றம் தானே!!!




உழைச்ச காசு தங்கவில்ல
வீடு வந்து சேரவில்ல
சிலகாசு சேர்த்துவைக்க
நேரமிங்கு கூடவில்ல!

பதுசான விடுகதைய
பக்குவமா சொன்னவளே!
விலைவாசி ஏற்றமிங்கு
வேடிக்கை காட்டுதடி!
விசுக்குன்னு ஏறிப்போகும்
விலைவாசி குறையலேன்னா
வெறுங்கஞ்சி குடிச்சிபுட்டு
வேலையத்தான் பார்த்திடுவோம்
வேறு என்ன நாம செய்ய??!!


அன்பன்
மகேந்திரன் 

Wednesday 13 July 2011

உன்னால் தானன்றோ?!!





விண்ணேறும்  துணிவு 
வியாக்கியானத் தெளிவு 
சான்றோர்முன் பணிவு
அழகுடனே வந்ததெல்லாம்
உன்னால் தானன்றோ?!!

சிந்தனையில் சிறந்தவனாய்
விவேகத்தில் வீரனாய்
பொறுமையில் சிகரமாய்
இன்றுநான் இருப்பதெல்லாம்
உன்னால் தானன்றோ?!!





பன்மொழி பலவேனும்
பாங்குடனே பேசிடவே
வாய்பழகி வந்தாலும்
இன்மொழியாம் தமிழை - நான்
என்றென்றம் நேசிப்பது
உன்னால் தானன்றோ?!!

எண்ணெழுத்து என்பதெல்லாம்
ஏற்றமாக எடுத்துரைத்து
அரிச்சுவடி ஆரம்பித்து
அடிப்படையாய் அத்தனையும்
குறைவின்றி புகட்டிவைத்தாய்!!




தடுமாறிய போதெல்லாம்
விரல் பிடித்து வழிநடத்தி
தோழனாய் தோள்கொடுத்து
வாழ்வினில் சுவடுகளை
தடம்பதித்து சென்றாய்!!

குழந்தைத்தனம் மாறாமல்
குறும்புகள் செய்தபோதும்  
புன்சிரிப்பு மாறாமல்
சிறப்பாக சீர்தூக்கி
குறைகள் யாவையுமே
நிறைவாய் மாற்றினாய்!





தற்குறியாய் இருந்தவனை
தரணியில் மனிதனாய்
திறனாய் தனித்து நிற்க
தரமேற்றி வைத்ததெல்லாம்
ஏற்றமுடை ஏந்தலாம்
அறிவுடை ஆசானே நீதானன்றோ!!

உன்னுருவைக் கண்டாலே
கசந்த தினமுண்டு - இன்றோ
என்னுருவைக் காண்கையில்
என்னிலையை நினைக்கையில்
ஏங்குகிறது என் நெஞ்சம்
கல்விக் களஞ்சியமே - உனை
காண விழைகிறேன்
காட்சியொன்று கிடைக்காதா?!!!

அறிவில்லாதவனையும்
அறிவில் ஆதவனாய்
படைக்கும் பிரம்மனே
பாரினில்  உனக்கீடு
எவரேனும் இல்லையிங்கு!!


அன்பன்
மகேந்திரன்

Tuesday 12 July 2011

கலைகள் காக்க வேணுமைய்யா!!


தந்தனத்தோம் பாடிக்கிட்டு
தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு
வில்லெடுத்து வந்தேனைய்யா
நாட்டுப்புறப் பாட்டுபாட!!

என்குலத்த காப்பவனே
ஆனைமுகம் கொண்டவனே
இட்டுகட்டி பாட்டுபாட
இசையாக வாருமைய்யா!!

எங்ககுடி மூத்தகுடி
ஏகலைவன் வாழ்ந்தகுடி!
பண்போடு கலைவளர்த்த
பார்போற்றும் தமிழ்க்குடி!!

எத்தனையோ நாடுகண்டேன்
வில்லடிச்சி பாடிவந்தேன் 
எங்ககுடி  கலையைப்போல்
வேறெங்கும் இல்லையப்பா!!





ஆயி அப்பன் காலத்தில
எங்க கலை எல்லாமே
கலசமா இருந்ததைய்யா!
ஆண்டவனா ஆயி அப்பன்
சொல்லித்தந்த கலையெல்லாம்
அள்ளித்தந்த செல்வமைய்யா!!

நாகரீகம் வளர்ந்தாலும்
நாணலிங்கு மூங்கிளல்ல
பெத்ததாயி எப்போதும்
அத்தையாக ஆவதில்ல!!
மெத்தப் படிச்சாலும் - கலைய
கொஞ்சம் தெரிஞ்சிக்கோப்பா
கலாச்சாரம் என்பதெல்லாம்
கலையால வளருதப்பா!!

நாடெங்கும் போயிவந்தோம்
கலையெல்லாம் பரப்பிவந்தோம்
தந்த தகவல் அத்தனையும்
தந்திரமா சொல்லிவந்தோம்!

ஏற்றத்தில ஏறிநிற்கும்
எங்ககுடி இளைய மக்கா
நம்மகுடிக் கலைகளெல்லாம்
என்னதுன்னு தெரிஞ்சிக்கோப்பா!!




வெள்ளையுட போட்டுக்கிட்டு
காலில் சலங்கை கட்டிக்கிட்டு
கைக்குட்ட கச்சதுணி 
விரல்நுனியில் கட்டிக்கிட்டு
கிராமத்து கோவிலெல்லாம்
பாட்டுபாடி ஆடுவோமே
அதுதாய்யா ஒயிலாட்டம்!!




மஞ்சளிலே குளிச்சிபுட்டு
மடிப்புசேல கட்டிக்கிட்டு
கையிலிரு கோலெடுத்து
தட்டித்தட்டி ஆடிவரும்
எங்குலத்து பெண்களெல்லாம்!
சமுதாய கதைபேசி
சுத்திசுத்தி ஆடுவரே
அதுதாய்யா கோலாட்டம்!!






பொம்மைகளை வைச்சிகிட்டு 
நூலினாலே ஆட்டிகிட்டு
செய்திசொல்லி வந்தனரே
எம்குலத்து மக்களெல்லாம்!
தகவல்களை பரிமாற்ற
அன்றிருந்த கலைதானே
பேறுபெற்ற பொம்மலாட்டம்!
கண்ணெட்டும் தூரம்  வரை
இன்றதனை காணவில்லை
எங்கேதான் போனதுவோ
இன்றிருக்கும் சந்ததிக்கோ
பொம்மலாட்டம் தெரியலியே!!



கும்பத்த நடுவில் வைச்சி
மலராலே அலங்கரிச்சி
பொன்கரகம் பூங்கரகம்
பூத்துவந்த தேன்கரகம்!
கரகத்த தலையில் வைச்சி
மகமாயி முன்னால
அவபுகழ பாடிக்கிட்டு
ஆணும் பெண்ணும் ஆடுவரே
அதுதாய்யா கரகாட்டம்!!


இருட்டினிலே வளர்ந்ததைய்யா
ஒய்யார முளைப்பாரி!
தலைப்பாகை சுத்திகிட்டு
முளைப்பாரி தூக்கிகிட்டு
ஊரைச் சுத்திவந்ததுமே
முளைப்பாரி நடுவிருக்க
சுமந்து வந்த பெண்களெல்லாம்
கூடிநின்று கைகொட்டி
ஒயிலாக ஆடுவரே
அதுதாய்யா கும்மியாட்டம்!!


ஐந்தடி கம்பெடுத்து
ஆசான வேண்டிகிட்டு
அழகாக அளவெடுத்து
சிறுவட்டம் போட்டுகொண்டு
கையிலே சிலம்பிருக்க
விரலாலே வித்தைகாட்டி!
காத்து கூட நுழையாம
சுத்தி சுத்தி ஆடுவரே
அதுதாய்யா சிலம்பாட்டம்!!

எத்தனையோ ஆட்டங்கள்
எடுப்பாக இருந்ததைய்யா!
காலம்மாறி போகையில
காணாம போச்சுதய்யா!!

பண்பாடு பேசிவரும்
கலாச்சாரம் காத்துவரும்
கலைகள் கூட இங்கே
கண்ணாமூச்சி காட்டுதைய்யா!
காசுபணம் சேர்த்திடலாம்
காரவீடு கட்டிடலாம்
காலம்போற போக்கினிலே
கலைகள் மட்டும் வாழலேன்னா
நமக்கு அடையாளம் இல்லையப்பா!!
நம்மக்குடிக் கலைகளெல்லாம் 
நலிஞ்சு போயி கிடக்குதையா 
கலைஞர்கள் வயிறெல்லாம் 
காஞ்சிபோயி கிடக்குதைய்யா!
கண்ணான கலாச்சாரம்
போற்றிட நீ வேணுமின்னா
கலைகள் காக்க வேணுமைய்யா!!

அன்பன்
மகேந்திரன் 

Sunday 10 July 2011

என்னுயிரில் கலந்துவிடு!!!







சிந்தையின் மந்தையில் 
சிறுகுடில் போட்டு 
சிறியேன்  எனை 
சிறையிட்டு வைத்த 
சிங்காரத் தமிழே!!
 
அகமே முகமென  
அறிவில் ஏற்றி - எனை
அவையில்  நிறுத்திய
அழகின் பொருளாம்
அன்புத் தமிழே!!
 

 


தவிலின் ஒலியாய்
தரணியின் மொழியாய்
தங்கும் இடமெலாம்
தனிப்புகழ் ஏற்ற
தங்கத் தமிழே!!
 
கவிபல இயற்றும்
கவிஞர்கள் நெஞ்சில்
கதைகள் பேசும்
கபடின் சுவடிலா
கனகத் தமிழே!!
 
பங்கய மலரொடு
பன்னிசை பாடிய
பட்டினப்பாலையை
பதமுடன் நல்கிய
பவளத் தமிழே!!
 
 
சலனம் கலைத்து
சதுரம் கட்டி - எனை
சதிராடச் செய்த
சத்தியம் உரைக்கும்
சந்தத் தமிழே!!
 
எண்ணத்தின் வண்ணத்தை
எதுகை மோனையாய்
எடுத்து உரைக்க
எம்முள் நிறைந்த  
எழுச்சித் தமிழே!!
 
ஆழிசூழ் உலகின்
ஆகமம் உணர்த்த
ஆயிரம் படைப்பாய் - என்
ஆவியில் உறைந்த
ஆதித் தமிழே!!
 
 
 
இன்பத்தமிழ் சொற்களெல்லாம்
இங்கித வார்த்தைகளால்
இயைபுடனே கையாள
இன்று வரம் தந்துவிடு
இப்பிறப்பு உய்திடவே!!

தென்பொதிகை சாரலாய் - எனை
ஆளவந்த தேன்தமிழே!!
நானறிந்த எழுத்தெல்லாம்
நீ தந்த பரிசன்றோ!!
நான் பார்த்த முதல் முகத்தின்
முகவரியும் நீயன்றோ!!
எழுதுகின்ற எழுத்தெல்லாம்
ஏறுமுகம் பெற்றிடவே
என்னுயிரில் கலந்துவிடு!!!


அன்பன்
மகேந்திரன் 
 
 

Saturday 9 July 2011

உப்பின் பிறப்பிடம்!!





விதையொன்றும் போடாமல்
கிளையேதும் இல்லாமல்
வெள்ளைநிறப் பூக்களாய்
மண்மாதா மடியிலே
மலர்கின்ற மலர்களாம்!!

அறுசுவையில் உனக்கென
சிங்கார இருக்கையாம்
சிம்மாசனம் உண்டு!!
உனையன்றி உணவின்
சுவைகூட தொல்லையே!!




கடல்நீரின் பிள்ளையாய்
ஆண்பாத்தி வழியாக
நச்சுநீர் நழுவவிட்டு
பெண்பாத்தி அடைந்ததும்
தானாகப் பூக்கிறாயே!! 

பூமாதா மடியினிலே
அழகுருவாய் பூக்கும் நீ!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அழகிய தத்துவம் படைத்தாய்!



தன்னில் உறையும் நீரினில்  
தேவையற்ற நீர்மத்தை
ஆவியாக்கி களைந்து
பயனுள்ள நீர்மத்தை
பெண்பாத்தி பாய்த்திடும்
ஆண்பாத்தி செயலே!!

வந்தநீரை மடியேற்றி
வழிந்தோடா மடைகட்டி!
சிலநாட்கள்  கருவைத்து
பொத்திவைத்து காத்திருந்து
வெண்ணிறப் படிகங்களை
அழகாகப் பிரசவிக்கும்
பெண்பாத்தி செயலே!!
படர்ந்த பனிமலையோ
குவிந்த கோபுரமோ - என
சிலகாலம் கூடிவாழ்ந்து- பின்
சிறு அடைப்புக்குள் நுழைந்து 
உன்னைக் கரைத்து 
எம் உணவை ருசியேற்றும்
உன் தியாகமொரு படிப்பினைதான்!!

அளவுடன் சேர்த்தால் 
ருசிக்கச் செய்யும் நீ!
அளவற்றுப் போகையில்
வெறுப்படையச் செய்வாய்!!

பரந்திருக்கும் பாரதத்தில்
பளபளக்கும் உன்னை
பிரசவிக்கும் பெருமையில்
இரண்டாம் இடமாம்
எம்மூர் தூத்துக்குடிக்கு!!

எம்மூர் பெருமையை
ஏற்ற வந்த உப்பினமே!
தமிழுள்ள வரை
உன் புகழ் நிலைக்கட்டும்!!


அன்பன்
மகேந்திரன்