பனிப்பாறை மேல் பதிந்த
வெற்று உள்ளங்கை போல
சில்லிட்டு உதிரம்
உறைந்தே போன தருணமது!!
ஓங்கியடித்த சுத்தியல்
சிற்றங்குலம் இடம் மாறி
பெருவிரலை பதம்பார்த்தது போல்
சுருண்டுபோன தருணமது!!
பெருந்திரள் மக்கள் கூடும்
சபையின் நடுவினிலே
உடையற்றுப் போன
நிர்வாணத் தருணமது!!
சபையின் நடுவினிலே
உடையற்றுப் போன
நிர்வாணத் தருணமது!!
நிகழ்நிலை தவறி
சுயம் மறந்துபோனவன்
மீள்நிலை திரும்பி - மீண்டும்
மனம் கருகிப்போன தருணமது!!
குப்பையில் தவழ்ந்து
விண்ணேற்றம் கண்டபின்
கோபுர நிலை தடுமாறி - பாழும்
கிணற்றில் வீழ்ந்த தருணமது!!
பொய்ச்சிறகை விரித்து
பெருவானம் வியாபித்து
சிறகொடிந்து போனதும்
விறகொடித்த மரமானதேன்?!!
நம்பிக்கை எனும் தேனில்
நஞ்சூற்றி குடித்துக் களித்து
நீலம் பரவிடுகையில்
நீச்சம் வீழ்ந்தது ஏன்?!!
நிதர்சனம் எனும் அழகு
நித்திலமாய் இருக்கையில்
பொய்யரிதாரம் பூண்டதேனோ
செய்யாப் புகழுக்காக!!
மாற்றான் ஒருவன்
இவனுக்கில்லை ஈடென
வேற்றோன் மெச்சுவதற்காய்
பொய்வேடம் தரித்ததேனோ !!
பொய்யன் இவனென
பொய்கள் சாயமிழந்த பொழுது
முன்னிலை நிற்போரை
நோக்குதல் கூச்சமன்றோ?!!
உன்னிலை தவறி
உண்மைகளை மறைத்து
பொய் பூக்களுக்கு நீரூற்றுவதால்
வீசும் மணத்திற்கு வாசமுண்டோ?!!
உற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!
அன்பன்
மகேந்திரன்